எப்படி சொல்வது? - இலங்கைப் பெண்
Friday, January 26, 2007
சேலை அணிந்த மாது ஒருத்தி
ஒரு ஆணை சோலை என நம்பி வாழ
அவனோ நான் சோலை இல்லை
சோலையில் இருக்கும் பூக்களில்
தேன் உள்ளவரை மட்டுமே அதை
நுகரும் வண்டு என பதிலளித்தால்
அந்த மாதுவின் நிலை என்ன?
கல்லறையா???
மறுமணமா???
விதி என்பதா???
சதி என்பதா???
எப்படி சொல்வது????
கொய்தது பிச்சி @ 1:34 AM, ,
காதல் - சிந்து
உலக உயிர்களிலே
உலவும் உனக்கு
உருவமில்லை- ஆனால்
உணர்ச்சிகள் உண்டு
உயிரில்லை-ஆனால்
உயிரினுள்
ஊடுருவும் தன்மையுண்டு.
நீ எம்மிடம் வந்தால்
உடன்பிறந்த
உறவுகள் இல்லை
உயிர் கொடுத்த
உற்ற அன்னை இல்லை
உன்னால் எமக்கு
உணவில்லை
உறக்கமில்லை-ஆனால்
உபாதைகள் உண்டு.
நீ எமை பற்றினால்
எம் பார்வை வேறு பாசம் வேறு
பழகிய நட்பும் பகையாகும்
தனிமையே இனிமையாகும்.
பலருள் நீ வந்தாலும்
சிலருள் வேரூன்றுவாய்
சிலருள் மரமாகி
பழம் தருவாய்
சிலருள் முளையிலே
கருகி விடுவாய்
இது விதியின் விளையாட்டா?
காதல் சாதலுக்கு
வரும்முன்
வாழ்தலுக்கு
தயாராக வேண்டும்.
கொய்தது பிச்சி @ 12:29 AM, ,
மாவீரர்கள் - சிந்து
முடிவிலிப் போருக்கு
முற்றுப்புள்ளி வைப்பதற்கு
முயன்று - வாழ்வில்
முற்றுப்பெற அனுபவிக்காமல்
முடிந்து போனவர்கள் நீங்கள்
முட்களுடன்
முட்டி மோதி
முதன்மையானவர்கள் நீங்கள்
மண்ணில் வந்த
மண்புழுக்கள் - எந்நேரமும்
மண்ணுடன் உறவாடும்.
அதுபோல.....
மானமுடன் வாழ்ந்த
மனிதன்
மானமுடன்
மரணிக்க நினைப்பது தப்பல்ல!
மலரினுள்
மறைந்திருக்கும்
மகரந்தத்தின்
மகிமையை
உலகிற்கே உணர்த்திடும்
வண்டுகள் போல் அல்லவோ
நீங்கள்
மாவீரர்களே உங்கள் பெருமையை.....
மரணத்தின் வாயிலில்
உணர்த்தி விட்டீர்கள்...
எமக்கு!
எங்கள் உயிரை காக்க
உங்கள் உயிரை இம்மண்ணில்
புதைத்தீர்கள்!
கொய்தது பிச்சி @ 12:23 AM, ,
சிரிப்புத்தான் வருகிறது - ஷீ-நிசி
Wednesday, January 24, 2007
அவசரமாக வந்த சிறுநீரை
அருகிலேயே வெளியேற்றிவிட்டு
தொடர்ந்து எழுத ஆரம்பித்தான் சுவற்றில்..
"நாய்கள் மட்டும் இங்கு சிறுநீர் கழிக்கவும்"
என்ற வாசகத்தை!
கொய்தது பிச்சி @ 4:18 AM, ,
தேசத்தின் குரல் (ஆன்ரன் பாலசிங்கம்) - இலக்கியன்
தேசத்தின் குரலோனே
செங்கதிர் சொல்லோனே
தேசியத்தின் சுவடோடு
சென்றுவிட்ட வல்லோனே
தமிழ் வாழும் நாள் எல்லாம்
வாழ்ந்திடுவீர் எம்மோடே
காலனின் வருகை கண்டும்
கலங்கினீர் தமிழனுக்காய்
காலம் கனியும் நேரத்தில்
கவர்ந்து விட்டான் காலதேவன்
பேனா முனைகளிலே
பேசியது உம் உணர்வு
துப்பாக்கித் தோட்டாவாக
துளைத்தது சிங்களத்தை
பேச்சுவார்த்தை மேசைகளில்
பேரமிட்ட சிங்கள துவேசிகளை
மதியுரைஞர் உம் மதியினாலே
மதியிழந்து கலங்கவைத்தீர்
போரும் சமாதனமும் தந்தீர்
போற்றுகின்ற பொக்கிசமாய்
நோய் வந்து உழன்றபோதும்
நேசித்தீர் சமதானத்தை
தேசியத்தலைவரின்
நேசத்துக்குரிய நண்பா
தேசம் போற்றும் உம்
நேசக்கரம் என்றும்
கொய்தது பிச்சி @ 4:15 AM, ,
என்னைக் காதலித்துப் பார் - பத்மஜா
Tuesday, January 23, 2007
தேனை சுவைத்த நாக்குடன்
தேனாய் இனிக்க பேசும்
தேன்மொழி என் ராதையே
என்னைக் காதலித்துப் பார்
துரத்தி விட்ட கவலைகளுடன்
துரத்தும் வாழ்வின் பள்ளங்களை
துரத்தி விளையாடும் கண்மணியே
என்னைக் காதலித்துப் பார்
அழகான முகநயங்கள் கொண்டு
அழகால் பிறரைக் கவர்ந்தாலும்
அழகை ரசிக்கக் கற்றவளே
என்னைக் காதலித்துப் பார்
கண்களிலே கண்ணீர் சொரிந்து
கண்ணனாம் என்னையே நினைத்து
கண்ணை கட்டும் கட்டழகியே
என்னைக் காதலித்துப் பார்
காதலிலே காமத்தைக் கழித்து
காதலியாய் ரசனை சேர்த்து
காதலைத்தான் புரிந்துக் கொள்ள
என்னைக் காதலித்துப் பார்
கவிதையால் என்னை நனைத்தாலும்
கவிதையிலே உண்மைக் கலந்து
கவிதையாய் வாழும் ராதையே
என்னைக் காதலித்துப் பார்
விரதமின்றி என்னை அணுகி
விரசமின்றி என் கைகோர்த்து
விருப்புடன் அன்பை அறிய
என்னைக் காதலித்துப் பார்
உன்னை சிரிக்கவைக்க நானிருக்க
உன்னை கடிந்துகொள்ள நானிருக்க
உன்னை ஏற்றுக்கொள்ள நானிருக்க
என்னை மட்டும் காதலித்துப் பார் -- -- -- பத்மஜா
கொய்தது பிச்சி @ 11:17 AM, ,
முதன்முதலாய் அம்மாவுக்கு - கவிஞர் வைரமுத்து
Saturday, January 20, 2007
அழகழகாய்ப் பொய்சொன்னேன்
பெத்தவளே உன்பெருமை
ஒத்தைவரி சொல்லலையே
காத்தெல்லாம் அவன்பாட்டு
காகிதத்தில் அவனெழுத்து
ஊரெல்லாம் அவன்பேச்சு
உன்கீர்த்தி எழுதலையே
எழுதவோ படிக்கவோ
இயலாத தாய்பற்றி
எழுதியென்ன லாபமென்று
எழுதாமல் விட்டேனோ
பொன்னையாதேவன் பெற்ற
பொன்னே குலமகளே
என்னைப் புறந்தள்ள
இடுப்புவலி பொறுத்தவளே
வயிரமுத்து பிறப்பான்னு
வயிற்றில்நீ சுமந்ததில்லை
வயிற்றில்நீ சுமந்தஒண்ணு
வைரமுத்து ஆயிடுச்சு
கண்ணுகாது மூக்கோடை
கறுப்பா ஒருபிண்டம்
இடப்பக்கம் கிடக்கையிலை
என்னென்ன நினைச்சிருப்ப
கத்தி எடுப்பவனோ
களவாடப் பிறந்தவனோ
தரணியாள வந்திருக்கும்
தாசில்தார் இவன்தானோ
இந்த விபரங்கள்
ஏதொண்ணும் தெரியாமை
நெஞ்சூட்டி வளத்தஉன்னை
நினைச்சா அழுகைவரும
கதகதெண்ணு கழிக்கிண்டி
கழிக்குள்ளை குழிவெட்டி
கருப்பெட்டி நல்லெண்ணை
கலந்து தருவாயே
தொண்டையிலை அதுஇறங்கும்
சுகமான இளஞ்சூடு
மண்டையிலை இன்னும்
மசமசன்னு நிக்குதம்மா
தித்திக்கச் சமைச்சாலும்
திட்டிகிட்டே சமைச்சாலும்
கத்தரிக்காய் நெய்வடியும்
கருவாடு தேனொழுகும்
கோழிக்குழம்பு மேலை
குட்டிகுட்டியா மிதக்கும்
தேங்காய்ச் சில்லுக்கு
தேகமெல்லாம் எச்சிஊறும்
வைகையிலை ஊர்முழுக
வல்லாரும் சேர்ந்தொழுக
கைப்பிடியாக் கூட்டிவந்து
கரையேத்தி விட்டவளே
எனக்கொன்னு ஆனதுன்னா
உனககுவேறை பிள்ளையுண்டு
உனக்கொண்ணு ஆனதுன்னா
எனக்குவேறை தாயிருக்கா...
கொய்தது பிச்சி @ 9:25 AM, ,
சிரிப்பு - கவிஞர் வைரமுத்து
வாழ்க்கை பூட்டியே கிடக்கிறது
சிரிப்புச் சத்தம் கேட்கும்போதெல்லாம்
அது திறந்து கொள்கிறது
வாழ்வின்மீது இயற்கை தெளித்த
வாசனைத் தைலம் சிரிப்பு
எந்த உதடும் பேசத் தெரிந்த
சர்வதேச மொழி சிரிப்பு
உதடுகளின் தொழில்கள் ஆறு
சிரித்தல் முத்தமிடல்
உண்ணால் உறிஞ்சல்
உச்சரித்தல் இசைத்தல்
சிரிக்காத உதட்டுக்குப்
பிற்சொன்ன ஐந்தும்
இருந்தென்ன? தொலைந்தென்ன?
தருவோன் பெறுவோன்
இருவர்க்கும் இழப்பில்லாத
அதிசய தானம்தானே சிரிப்பு
சிரிக்கத் திறக்கும் உதடுகள் வழியே
துன்பம் வெளியேறிவிடுகிறது
ஒவ்வொருமுறை சிரிக்கும்போதும்
இருதயம்
ஒட்டடையடிக்கப்படுகிறது
சிரித்துச் சிந்தும் கண்ணீரில்
உப்புச் சுவை தெரிவதில்லை
* * * * *
முள்ளும் இதுவே
ரோஜாவும் இதுவே
சிரிப்பு
இடம்மாறிய முரண்பாடுகளே
இதிகாசங்கள்
ஒருத்தி
சிரிக்கக்கூடாத இடத்தில்
சிரித்துத் தொலைத்தாள்
அதுதான் பாரதம்
ஒருத்தி
சிரிக்க வேண்டிய இடத்தில்
சிரிப்பைத் தொலைத்தாள்
அதுதான் ராமாயணம்
எந்தச் சிரிப்பும்
மோசமாதில்லை
பாம்பின் படம்கூட
அழகுதானே?
சிரிப்பொலிக்கும் வீட்டுத்திண்ணையில்
மரணம் உட்கார்வதேயில்லை
பகலில் சிரிக்காதவர்க்கெல்லாம்
மரணம்
ஒவ்வொரு சாயங்காலமும்
படுக்கைதட்டிப் போடுகிறது
ஒரு
பள்ளத்தாக்கு முழுக்கப்
பூப் பூக்கட்டுமே
ஒரு
குழந்தையின் சிரிப்புக்கு ஈடாகுமா?
காதலின் முன்னுரை
கடனுக்கு மூலதனம்
உதடுகளின் சந்திரோதயம்
விலங்கைக் கழித்த மனிதமிச்சம்
சிரிப்பை இவ்வாறெல்லாம்
சிலாகித்தாலும்
மரிக்கும்வரை சிரிக்காத மனிதர்கள்
உண்டா இல்லையா?
சிரியுங்கள் மனிதர்களே!
பூக்களால் சிரிக்கத் தெரியாத
செடிகொடிகளுக்கு
வண்டுகளின் வாடிக்கை இல்லை
சிரிக்கத் தெரியாதோர் கண்டு
சிரிக்கத் தோன்றுமெனக்கு
இவர்கள் பிறக்க
இந்திரியம் விழவேண்டியவிடத்தில்
கண்ணீர் விழுந்துற்றதோவென்று
கவலையேறுவேன்
சற்றே உற்றுக் கவனியுங்கள்
சிரிப்பில் எத்தனை ஐ¡தி?
கீறல்விழுந்த இசைத்தட்டாய்
ஒரே இடத்தில் சுற்றும்
உற்சாகக் சிரிப்பு
தண்ணீரில் எறிந்த தவளைக்கல்லாய்
விட்டுவிட்டுச் சிரிக்கும் வினோதச் சிரிப்பு
தலையில் விழுந்த தாமிரச் சொம்பாய்ச்
சென்§¡றடித் தேய்ந்தழியும் சிரிப்பு
கண்ணுக்குத் தெரியாத
சுவர்க்கோழி போல
உதடு பிரியாமல்
ஓசையிடும் சிரிப்பு
சிரிப்பை இப்படி
சப்த அடிப்படையில்
ஐ¡தி பிரிக்கலாம்
சில
உயர்ந்த பெண்களின் சிரிப்பில்
ஓசையே எழுவதில்லை
நிலவின் கிரணம்
நிலத்தில் விழுந்தால்
சத்தமேது சத்தம்?
சிறுசிறு சொர்க்கம் சிரிப்பு
ஜீவ அடையாளம் சிரிப்பு
ஒவ்வொரு சிரிப்பிலும்
ஒருசில மில்லிமீட்டர்
உயிர்நீளக் கூடும்
மரணத்தைத் தள்ளிப்போடும்
மார்க்கம்தான் சிரிப்பு
எங்கே!
இரண்டுபேர் சந்தித்தால்
தயவுசெய்து மரணத்தைத்
தள்ளிப் போடுங்களேன்!
கொய்தது பிச்சி @ 9:21 AM, ,
நட்புக்காலம் - கவிஞர் அறிவுமதி
எல்லாவற்றிலும் எனக்கு பிடித்ததையே
நீ
தேர்ந்தெடுத்தாய் !
உனக்கு பிடித்ததையே
நான்
தேர்ந்தெடுத்தேன் !
அதனால்தான்
நட்பு நம்மை
தேர்ந்தெடுத்திருக்கிறது.
~~~~~~~~~~~~~~~~~~~~~
நீ என்னிடம்
பேசியதைவிட
எனக்காக
பேசியதில்தான்
உணர்ந்தேன்........
நமக்கான நட்பை..!
~~~~~~~~~~~~~~~~~~~
காமத்தாலான
பிரபஞ்சத்தில்
நட்பைச்
சுவாசித்தல் அவ்வளவு
எளிதன்று.
கொய்தது பிச்சி @ 9:16 AM, ,
சட்டம் எங்கே? - A.R.S.மணியன்
ஜாதகத்தைத்
தடைசெய்யுங்கள்
எங்களுக்கு வரன் சாதகமாகும்
தங்கத்தைத்தடை செய்யுங்கள்
மஞ்சள் கயிறே தங்கமாகிவிடும்
வரதட்சணையைத்
தடை செய்யுங்கள்
எங்களுக்கு
வருங்காலம் வாய்த்துவிடும்
குறைந்த பட்ச
திருமண வயதுக்கு
சட்டம் இயற்றியது சரிதான்
முதிர்கன்னிகளுக்கு
அதிக பட்ச வயதுக்கு
சட்டம் எங்கே?
கொய்தது பிச்சி @ 9:14 AM, ,
ஈழப் பொங்கல் - கபிலன்.
Friday, January 19, 2007
பீரங்கிகளின்
பாதத்தில்
மண் பானைகளாய்
மண்டையோடுகள் உடைய
பட்டினி கிடக்கிறது
பொங்கல்.
*
பாலசிங்கத்தின்
கல்லறையில் கசியும்
ஊதுபத்தி புகை
அனைத்து தமிழர்களின்
ஆக்ஸிஜன் காற்று.
*
தாய்களின் மார்புகளில்
பொங்கிய
பால் பொங்கலை
குடிப்பதற்கு
எப்படி எழுப்புவது
செத்துப்போன
குழந்தைகளை?
*
கடல் தாண்டி
போய் வந்த பறவையே
எப்படி இருக்கிறார்கள்
எம் தமிழர்கள்?
*
ஆண்டுக்கொரு முறை
தமிழர் திருநாள்
எப்போது பிறப்பார்
தமிழர்?
*
இந்திய விடுதலைக்குப் பின்
பிறந்தவன்
தமிழர் விடுதலைக்காகக்
காத்திருக்கிறேன்.
*
47 இந்தியாவுக்கு
2007 ஈழத்துக்காய்
விடியட்டும்!
கொய்தது பிச்சி @ 8:28 PM, ,